×

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றியவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றிய இளைஞர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2023ம் ஆண்டிற்கான “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று நடைபெறும் சுகந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2023 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மேலும் மார்ச் 31, 2024 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (2023 – 2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் இன்று முதல் (மே 1) வரும் 15ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in < http://www.sdat.tn.gov.in > மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பம், தங்கள் சாதனைகள் பற்றிய பத்திரிகை செய்திகள் மற்றும் சான்றிதழ்களை 3 புத்தகங்களாக தயார் செய்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

* கோடை கால பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு பிரிவில் 2024ம் ஆண்டிற்கான கோடைகால பயிற்சி முகாம் வரும் 13ம் தேதி வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுகள் நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்றிட தொகை ரூ.200 பயிற்சி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்பதற்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703482 என்ற எண்ணிலோ, அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம். இப்பயிற்சிக்கான விளையாட்டுகளின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

The post சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றியவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Collector ,T. Prabhu Shankar ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...